×

சேலத்தில் சினிமா பாணியில் நிலம் மோசடி தொழிலதிபர் இறந்ததாக சான்று பெற்று ரூ.10 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு: அம்பலம்,புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது

சேலம்: சேலத்தில் போலி இறப்பு சான்று, போலி வாரிசு சான்று தயாரித்து தொழிலதிபரின் ரூ.10 கோடி சொத்தை அபகரித்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சேலம் ஸ்வர்ணாம்பிகை நகரை சேர்ந்தவர் அஜய்குமார் (49), தொழிலதிபர். இவர் சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனக்கு ஓமலூர் காடையாம்பட்டி அருகேயுள்ள சிக்கனம்பட்டி கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த சொத்தை, நான் இறந்துவிட்டதாகவும், எனக்கு 2 மகள்கள் இருப்பதாகவும் போலி சான்றிதழ் தயாரித்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு விற்க முயற்சித்து வருகின்றனர். எனவே நான் இறந்ததாகவும், வாரிசுகளாகவும் போலி சான்றிதழ் தயாரித்து சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இப்புகார் பற்றி விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி அருண்கபிலன் உத்தரவிட்டார். இதன்பேரில் டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் எஸ்ஐ செந்தில்குமரன் விசாரணை நடத்தினார். அதில், தொழிலதிபர் அஜய்குமாரின் ரூ.10 கோடி சொத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்க முயற்சி செய்தது, ஓமலூர் பெரியேரிப்பட்டி வகுத்தானூரை சேர்ந்த தம்பித்துரை, சேலம் பொம்மியம்பட்டி அருகேஉள்ள சுண்டக்காபட்டியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நல்லதம்பி என தெரியவந்தது. அவர்கள் இருவரும் அஜய்குமாரின் வாரிசுகளாக இந்துஜா, லோகநாயகி என போலியான ஆவணங்களை தயாரித்து சொத்தை அபகரித்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து தம்பிதுரை, நல்லதம்பி, இந்துஜா, லோகநாயகி ஆகியோர் மீது போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தநிலையில் நேற்று, தம்பிதுரை (40), நல்லதம்பி (42) ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.10 கோடி சொத்தை அபகரிக்க சினிமா போல பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: அஜய்குமாரின் 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முடிவு செய்த தம்பிதுரையும், நல்லதம்பியும் முதலில் கடந்த 2007ம் ஆண்டே அஜய்குமார் இறந்ததாக சேலம் அரசு மருத்துவமனையில் சான்று பெற்று, அதனை சேலம் தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்து இறப்பு சான்று பெற்றுள்ளனர்.

பிறகு அஜய்குமாரின் வாரிசுகளாக தம்பிதுரையின் மனைவி லோகநாயகி மற்றும் இந்துஜா என்ற இருவரது பெயரில் வாரிசு சான்று வாங்கியுள்ளனர். அதன்பின், அந்த 2 ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்துபோனதாக பெங்களூரு போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளனர். அதன் ஆவணங்களை கொண்டு, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரத்தை எடுத்து, பாக பிரிவினை வழக்கை ஓமலூர் நீதிமன்றத்தில் நடத்தியுள்ளனர். அங்கு பாக பிரிவினை உத்தரவை பெற்று, அந்த 2 ஏக்கர் நிலத்தை பலரிடம் விற்க முன்பணத்தை பெற்று வந்துள்ளனர்.

அப்படி பணத்தை கொடுத்த நபர்கள், நிலத்தை பார்க்க வந்தபோது தான், இந்த இடம் அஜய்குமாருக்கு சொந்தமானது என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். அந்த நபர்களே அஜய்குமாரிடமும் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், தனக்கு தெரியாமலே தான் இறந்ததாக போலி இறப்பு சான்று, தனக்கு வாரிசாக 2 பெண்கள் பெயரில் வாரிசு சான்று, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை கொண்டு பாக பிரிவினை வழக்கு போன்றவை நடத்தப்பட்டிருப்பதை அறிந்துள்ளார்.

உடனே புகார் கொடுத்ததன் அடிப்படையில் தற்போது தம்பிதுரையும், நல்லதம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் இந்துஜா என்பது யார் என்று தெரியவில்லை. கற்பனையான ஒருவரை சேர்த்துள்ளனரா என்று விசாரணை நடக்கிறது. கைதான தம்பிதுரை, நல்லதம்பி ஆகிய இருவரையும் நேற்று சேலம் ஜே.எம்.6 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் இருவரையும் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

The post சேலத்தில் சினிமா பாணியில் நிலம் மோசடி தொழிலதிபர் இறந்ததாக சான்று பெற்று ரூ.10 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு: அம்பலம்,புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Ambalam ,Puratchi Bharatham Party ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்